மோசடி வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

பண மோசடி புகாரில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கோச்சடையான்’ திரைப்படம், 2014-ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், கடனாக பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பி தரவில்லை என கூறி, ஆட்-ப்யூரோ நிறுவனம், பெங்களூரு முதன்மை கோர்ட்டில் 2015-ம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதை ரத்து செய்யக்கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை கோர்ட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு கோர்ட்டு விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த 2 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்பாக, பெங்களூரு கோர்ட்டு மீண்டும் விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று பெங்களூரு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு லதா ரஜினிகாந்த நேரில் ஆஜரானார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு முக்கியமான தருணத்தில் உங்களை நான் சந்தித்து வருகிறேன். கோச்சடையான் படத்திற்கு கடன் வாங்கினார்கள் அதற்கு நான் சாட்சி கையெழுத்திட்டேன். தலையில் துப்பட்டா அணிந்து சென்றதாக சமூக வலைதளங்களில் என்னை தவறாக பேசுகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. நியாயத்திற்காக் தான் நான் சென்றேன். என்னை தாக்குவதற்கான காரணம் நான் ஒரு பெண் என்பதால் தான். நியாத்திற்கு ரஜினிகாந்த் கூட துணையாக இருப்பார். சட்ட ரீதியாக நான் எப்படி வழக்கை அணுக வேண்டுமோ, அப்படி அணுகினேன். இந்த கோச்சடையான் படம் குறித்து பல ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகிறது. இதனால் நானும் என்னுடைய கணவரும் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.

இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். மான நஷ்ட வழக்கு போடுவதற்கு நான் யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். என் கணவர் அரசியலுக்கு வருவதற்காக என்னுடன் ரகசியமாக அதிகமாக பேசி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.