என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை பற்றி அவதூறாக பேசும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் வரவேற்பை பெற்றது. இவரிடம் 2018 ஆம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி, அயலான் படம் ஆரம்பம் ஆனது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், கொரோனா ஊரடங்கு மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக பல வருடங்களாக போஸ்ட் புரொடக்‌ஷனிலேயே இருந்தது. இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இதனிடையே அயலான் படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ப்ரீ ரிலீஸ் விழா ஈசென்ட் நேற்று ( டிச.26) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “பொங்கலுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அந்த படங்கள் அடித்து துவம்சம் பண்ணட்டும். என்னை சிலர் சூப்பர் என்று சொல்வாங்க, சில பேரு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லுவாங்க. சில பேரு திட்டுவாங்க. ஆனால் நான் இதை எல்லாம் எடுத்துக்குறதே இல்லை. என் ஹேட்டர்ஸை நான் ஒன்னுமே சொல்ல விரும்பல, என்னை பிடித்தவர்களுக்காக நான் ஓடிக் கொண்டு தான் இருப்பேன்” என சுருக்கமாக பேசி முடித்து உள்ளார்.