இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு இசையமைப்பாளர் தீனா மோசடி: கங்கை அமரன்!

இறந்த பவதாரணியின் கையெழுத்தை போட்டு பணம் எடுத்திருக்கிறார்கள் என இசையமைப்பாளர் தீனாவை கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் சக இசையமைப்பாளர்கள், பாடகர்களுடன் கங்கை அமரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நியாயமாக பார்த்தால் நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இளையராஜா இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதில் நான் பேச வந்திருக்கிறேன். அதில் எனக்கு பெருமை. திரைப்பட உலகில் தொழிலாளர்களுக்காக தொடங்கி முதல் சங்கமே இசைக் கலைஞர்கள் சங்கம்தான். இதைத் தொடர்ந்துதான் மற்ற யூனியன்கள் எல்லாம் வந்தன. ஆனால் அந்த காலத்தில் தின சம்பளம் கிடையாது. இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்த பெரியவர்கள்தான் போராடி வாங்கித் தந்தனர். அவர்களுடைய கருணையால் நாங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறோம். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் அத்தனை பேரும் இங்கு வந்திருக்கிறோம்.

இந்த சங்கத்தை தொடர்ந்து ஆண்டவர்கள் யாரும் இல்லை. ஒருவருக்கு 2 ஆண்டுகள் பதவி கிடைக்கும். அதை நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் சங்க விதிகளின்படி ஒருவருக்கு 4 ஆண்டுகள்தான் பதவி என்பது விதி. ஏற்கெனவே நடந்த தேர்தலில் தீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். இதன் பிறகும் நாம்தான் ஆள போகிறோம் என இருக்கிறார். ஒருவரே தலைவராக இருப்பதை விட அனைவரும் தலைவர்களாக இருந்து அவர்களின் அனுபவத்தையும் உழைப்பையும் இந்த சங்கம் பெற வேண்டும் என்பதுதான் இளையராஜா போன்றோரின் கருத்தாக இருக்கிறது. இந்த யூனியனில் நடக்கக் கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றார்.

கொரோனா காலத்தில் பணம் கோரி பலர் கையெழுத்து போட்டதாக சில ஆவணங்களை கங்கை அமரன் ஆதாரமாக காட்டினார். மேலும் இறந்த பவதாரணியின் கையெழுத்தை கூட போட்டு பணத்தை எடுத்திருக்கிறார்கள். சுமார் ரூ. 80 லட்சத்திற்கு மேல் பணத்தை வாரி சுருட்டியுள்ளார்கள். எங்கே தேர்தலில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் தான் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில்தான் தானே மீண்டும் தலைவராக இருக்க வேண்டும் என தீனா நினைக்கிறார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இன்று இருப்பவர்களில் திரைப்பட உலகின் இசைக்கு இளையராஜாதான் முக்கியமான நபராக இருந்து வருகிறார். “தீனா நீங்கள் செய்வது சரியில்லை. ஒருவர் 4 ஆண்டுதான் தலைவராக இருக்க வேண்டும்” என இளையராஜா சொல்லியும் “அவர் அப்படித்தான் சும்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்னு” இளையராஜாவை தீனா தூக்கி எறிந்து பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஆள் எங்களுக்கு தலைவராக வரத் தேவையில்லை. எங்களை எல்லாம் வளர்த்து விட்டவர் இளையராஜாதான். ஆனால் அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என தீனா நினைக்கிறார். இந்த செயலை நான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சொன்னேன். (தீனா பாஜக உறுப்பினராகவும் பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராகவும் உள்ளார்). ஆனால் மோடிக்கு பிறகு தீனாதான் என்ற தெனாவட்டுடன் இருக்கிறார். எனவே அவர் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. அதையும் மீறி போட்டியிடுகிறார். நீதிமன்றத்தில் முறையிட்டோம், அதுவும் வேறு மாதிரி போய்விட்டது. இவ்வாறு கங்கை அமரன் கூறியுள்ளார்.