அப்படி மட்டும் போஸ் கொடுக்க மாட்டேன்: மிருணாள் தாகூர்!

டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் சீதாராமம் புகழ் மிருணாள் தாகூர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது புகைப்படக் கலைஞர்கள் அவரை வச்சக் கேமரா வாங்காம ஏகப்பட்ட ஸ்டில்களை எடுத்துத் தள்ளினர். ஆனால், புகைப்படக் கலைஞர்கள் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியாது என மிருணாள் தாகூர் அதிரடியாக மறுத்து விட்டு அங்கே இருந்து கிளம்பிச் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.

மராத்தியில் 2014ம் ஆண்டு வெளியான ஹலோ நந்தன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மிருணாள் தாகூர் தொடர்ந்து விட்டி தண்டு, சுராஜ்யா உள்ளிட்ட மராத்தி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். உடனடியாக அவருக்கு பாலிவுட்டில் லவ் சோனியா படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் 30 படத்தில் நடித்தார். பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், டூஃபேன், தமாகா, ஜெர்ஸி (இந்தி) என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தவருக்கு துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியில் பல படங்களில் நடித்து வந்தாலும் சில படங்களை தவிர பெரிதாக அவர் ஷைன் ஆகவில்லை. துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து டோலிவுட்டில் நானியுடன் அவர் நடித்த ஹாய் நான்னா படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் பெற்றது. இந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.

பாப்பராஸி என அழைக்கப்படும் புகைப்படக் கலைஞர்கள் மும்பையில் சினிமா பிரபலங்கள் எங்கே சென்றாலும் போட்டோக்களை எடுத்து தள்ளுவார்கள். இப்படி போஸ் கொடுங்க, அப்படி போஸ் கொடுங்க என நடிகைகளை பார்த்தால் மட்டும் வித விதமாக போஸ்கள் கொடுக்கச் சொல்லி போட்டோக்களை எடுப்பார்கள். இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூரிடம் போட்டோக்களை எடுத்து வந்த நிலையில், சிலர் பேக் போஸ் கொடுங்க என கேட்டதும், அதற்கு அதுமட்டும் தர முடியாது என மறுத்து விட்டார். தற்போது அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. பல நடிகைகளும் பேக் போஸ் கொடுப்பதை பெரிதாக விரும்பவில்லை என்றாலும் யாரும் அதை வெளிப்படையாக மறுத்ததில்லை. மிருணாள் தாகூர் சொன்னதை பார்த்த ரசிகர்கள் கடைசியில் ஒரு நடிகை வாய் திறந்து சொல்லி விட்டார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.