ஐஸ்வர்யா லட்சுமி என் நெருங்கிய தோழி. அவ்வளவு தான்: அர்ஜுன் தாஸ்!

பொன்னியின் செல்வன் படம் புகழ் ஐஸ்வர்யா லட்சுமியை தான் நடிகர் அர்ஜுன் தாஸ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் என பேசப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு யார் என்பதை தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.

மௌனகுரு படம் புகழ் சாந்தகுமார் இயக்கியிருக்கும் ரசாவதி படத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். அந்த படம் மே 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் தாஸ் கூறியதாவது:-

எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைத்து இயக்குநர்களுமே எனக்கு நல்ல கதாபாத்திரங்களையே கொடுத்திருக்கிறார்கள். டப்பிங் ஆர்டிஸ்டாக கெரியரை துவங்கிய நான் இன்று நடிகராக இருக்கிறேன். நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

மௌனகுரு எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் நடித்தது நல்ல அனுபவம். சாந்தகுமார் கதை சொன்னதும் பிடித்துவிட்டது. அவர் இயக்கத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை. ஓய்வு எடுக்க டாக்டர் ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே ரசாவதி படத்தின் கதை ஆகும்.

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பது என் பழக்கம். என் நடிப்பில் கடந்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. இந்த ஆண்டும் வரும். கைதி 2 படம் வரும் என லோகேஷ் கூறியிருக்கிறார். விக்ரமில் நான் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என்றே நினைக்கிறேன். மதுமிதா இயக்கத்திலும், விஷால் வெங்கட் இயக்கத்திலும் ஒரு படம் பண்ணுகிறேன்.

கடந்த ஆண்டு ஒரு படத்திற்காக நானும், ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டோம். உடனே நானும், அவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சு கிளம்பியது. அவர் என் நெருங்கிய தோழி. அவ்வளவு தான். எங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதனால் என் திருமணத்திற்கு இப்போ அவசரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அந்த புகைப்படம் வைரலானதுமே ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்தார். நானும், அர்ஜுன் தாஸும் நண்பர்கள் மட்டுமே. மற்றபடி எதுவும் இல்லை. நாங்கள் வெளியிட்ட புகைப்படம் இந்த அளவுக்கு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு இடையே எதுவும் இல்லை என இன்ஸ்டா ஸ்டோரியில் விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது அர்ஜுன் தாஸும் அதையே தான் சொல்லியிருக்கிறார்.