உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி: தமன்னா!

‘அரண்மனை 4’ வெளியாகி 5 நாட்களில் இந்தியாவில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், நடிகை தமன்னா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

கடந்த 3 -ந்தேதி ‘அரண்மனை 4’ படம் திரையரங்குகளில் ‘ரிலீஸ்’ செய்யப்பட்டது. இப்படம் வெளியான திரையரங்குகளில் “ஹவுஸ்புல்” காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், 5 நாட்களில் ரூ.35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை தமன்னா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.