மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

ஷார்ஜாவில் இருந்து திரும்பிய போது ஆடம்பர வாட்சுகளுடன் வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையம் வந்த ஷாருக்கான் ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொகுசு கடிகாரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. சுங்க வரியாக ரூ. 6.83 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற ஷாருக்கானுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டாலும் ஷாருக்கான் உடன் வந்த மேலும் சிலரை இரவு முழுக்க சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேற அனுமதி மறுத்துவிட்டதாகவும் விசாரணைக்குப் பிறகு இன்று காலை தான் வெளியே செல்ல அனுமதி அளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.