நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானார்!

டோலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் கிருஷ்ணா, தமிழில் சியான் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் நடித்துள்ளார். மகேஷ் பாபுவின் அம்மா செப்டம்பர் மாதம் தான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன், அம்மா என சமீபத்தில் தனது குடும்பத்தில் இருவரை இழந்த துயரில் இருந்தே மீள முடியாமல் தவித்து வந்த நடிகர் மகேஷ் பாபுவின் அப்பாவும் உயிரிழந்தது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.