போலீஸ் எப்ஐஆரால் எனக்கு சொல்ல முடியாத துயரம்: சன்னி லியோன்

கேரள போலீஸ் போட்டுள்ள எப்ஐஆரால் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும், அந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன் முறையீடு செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை. அதனால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர் அளித்த புகாரின் பேரில், மாநில குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநில குற்றப்பிரிவு பிரிவு போலீசார் தனக்கு எதிராக தாக்கல் செய்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் சன்னி லியோன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘என் மீதும் என்னுடன் தொடர்புடையவர்கள் மீதும் போடப்பட்ட எப்ஐஆரை ஏற்க முடியாது. எந்த குற்றத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை. இந்த வழக்குபதிவால் நாங்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளோம். விசாரணை என்ற பெயரில் நீண்ட காலமாக இவ்வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. எனவே இவ்வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.