நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு ஆகியோர் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோக்களாக வலம் வந்தவர்கள் விஜயகாந்தும் சத்யராஜும். ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பே விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை, 100வது நாள் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் சத்யராஜ். நடிகர் சத்யராஜ் தற்போதும் சினிமாவில் படு ஆக்டிவாக உள்ளார். குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சத்யராஜ், முன்னனி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிக்காமல் உள்ளார். கடைசியாக 2010ஆம் ஆண்டு விருதகிரி படத்தில் நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்தம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் விஜயகாந்த். தற்போது உடல்நிலை ரொம்பவும் குன்றியுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் விஜயகாந்த்.

அவ்வப்போது சினிமா பிரபலங்கள் நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் ஷண்முக பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். விஜயகாந்தின் கையை பிடித்தப்படி நீண்ட நேரம் அமர்ந்திருந்த சத்யராஜ், அவரது கன்னத்தை கிள்ளியும் முத்தம் கொடுத்தார்.

நடிகர் விஜயகாந்த் தற்போது பேச முடியாத நிலையில் உள்ளார். அவருடைய உடம்பு அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை என தெரிகிறது. விஜயகாந்தை சந்தித்த சத்யாராஜும் நடிகர் தியாகும் சோகம் ததும்பும் கண்களுடன் அவரை பார்த்தப்படி அமர்ந்துள்ளனர். நடிகர்கள் சத்யராஜும் தியாகும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தியாகும் விஜயகாந்தின் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு உடனான சந்திப்பு குறித்து நடிகர் விஜயகாந்த்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை சந்தித்த போட்டோக்களுடன் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு அவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த மகிழ்ச்சியான தருணம்.. என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.