விஜய்யிடம் இருக்கும் பணிவு யாரிடமும் இல்லை: ஷாம்

விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை என்று நடிகர் ஷாம் கூறியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், நடிகர் ஷாம், விஜய்யின் நட்பு பற்றி கூறுகையில், “குஷி படத்தில் நடித்த பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து நடிக்கிறேன். நான் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார்கள். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை. நிறைய சொல்லிக்கொடுப்பார். நான் தில்லாலங்கடி படத்தில் நடித்தது பற்றி பாராட்டி பேசினார். அவர் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். ‘வாரிசு’ படத்தில் நடித்தது ஒரு குடும்பத்தில் வாழ்ந்தது போல் இருந்தது. 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்” என்று கூறினார்.