குடும்பத்துடன் கோலாகலமாய் பொங்கல் கொண்டாடிய நயன்தாரா!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களின் குழந்தைகளுடன் கலக்கலாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

நடிகை நயன்தாரா கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து குடும்பத்தினரின் அனுமதியுடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்துக்கு பிறகு இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வை கழித்து வந்தனர். மேலும் தங்களின் கலக்கல் போட்டோக்களையும் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஊர் அறிய கோலாகலமாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏஆர் ரஹ்மான், சூர்யா ஜோததிகா, கார்த்தி, விஜய் சேதுபதி , ஜெயம் ரவி என பல பிரபலங்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருமணம் ஆன 4 மாதங்களில் அதாவது கடந்த அக்டோபர் மாதம் தானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருப்பதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன். இந்த விவகாரம் சர்ச்சையான போதும் அழகாக டீல் செய்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். தங்களின் மகன்களுக்கு உயிர் உலகம் என பெயர் வைத்துள்ள விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என அனைத்தையும் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பொங்கல் திருநாளையும் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக கொண்டாடியுள்ளனர். இதில் சுடிதார் அணிந்துள்ள நடிகை நயன்தாரா நெற்றியில் குங்குமம், நெற்றி வகுட்டில் குங்குமம் என மங்களகரமாக உள்ளார். விக்னேஷ் சிவன் நீல நிற சட்டை அணிந்துள்ளார். தங்களின் மகன்களான உயிருக்கும் உலகிற்கும் வெள்ளை நிறத்தில் பாபா சூட் மாடலில் ட்ரவுஸர் சட்டை அணிவித்துள்ளனர். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விக்னேஷ் சிவன், பொங்கலோ பொங்கல், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் இவ்வுலகில் அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வாழ்த்துக்கள் !!! என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.