விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு: ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டாவுடன் தான் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் சலோ படத்தின் மூலம் என்ட்ரியானார். தொடர்ந்து சரீலேனு நீக்கெவரு, தேவதாஸ், பீஷ்மா, புஷ்பா, சீதா ராமம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜயுடன் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றும் போட்டோக்கள் வெளியாகி வந்தது. இதனால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மறுத்த நடிகை ராஷ்மிகா தாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என கூறி வந்தார். இந்நிலையில் 2023 புத்தாண்டின் போது இருவரும் மாலத்தீவில் தனித்தனியாக இருக்கும் போட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இதனால் இருவரும் மாலத்தீவில் ஒன்றாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்து வந்தது. இதுவரை இந்த விஷயம் குறித்து மவுனம் காத்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டதாக வேதனைப்பட்டுள்ளார் ராஷ்மிகா. சிறு வயது முதலே தான் ஹாஸ்டலில் தங்கி படித்ததாகவும் பள்ளியில் அதிகமாக யாரோடும் பேசாமல் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாக நிறைய பேர் தன்னை திமிர் பிடித்தவள் போல என்று தவறாக புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அறையில் தனியாக உட்கார்ந்து பல நாட்கள் அழுததாகவும் தெரிவித்துள்ளார். தனது அம்மா தனக்கு சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்தான் தன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ள அவர், ஒரு எல்லை வரைதான் காத்திருப்பேன் என்றும் எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மாலத்தீவு பயணம் குறித்தும் பேசியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா தனது நண்பர், அவரோடு ‘டூர்’ சென்றதால் என்ன தவறு என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.