ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்: ஓய்ஜி மகேந்திரன்!

விஜய்தான் சூப்பர் ஸ்டார் என ஒரு பக்கம் ஹாட்டாக பேசப்பட்டு வரும் நிலையில் ரஜினிகாந்தின் சகலையான ஒய் ஜி மகேந்திரன் அதுகுறித்து தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களாலும் பிரபலங்களாலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 72 வயதிலும் சினிமாவில் கோடிக் கணக்கில் பிஸ்னஸ் கொடுத்து வரும் ரஜினிகாந்த் பல முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தனது அடுத்த படங்களுக்கும் முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய் என தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் சரத்குமார்8 ஆகியோர் கூறி வந்தனர். இதேபோல் பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மியும் கூறி வந்தார். இதற்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்த்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என கூறி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் சகலையான ஒய் ஜி மகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் அந்த திரைப்படத்தை கிளாப் அடித்தும் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, 1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க சென்றபோது, தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக தான் பங்கேற்றுள்ளதாக கூறினார். இது எல்லாமே காலத்தின் செயல் என்ற ரஜினிகாந்த், நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் என்றார். மேலும் இது மிகவும் கட்டுக்கோப்பான குழு என்றும் இதில் படித்தவர்கள், பல துறைகளில் வல்லுநர்களாக இருந்தனர் என்றும் கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்து இருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்து இருக்கும் என்று கூறிய ரஜினிகாந்த், இந்த ட்ராமாவை பொருத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்களை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய் ஜி மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாக பயன்படுத்தவில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
மேலும் இந்த நாடகம் படமாக எடுக்கப்படும்போது மிகப்பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளது என்ற ரஜினிகாந்த், வசந்த் திரைக்கதை எழுதவுள்ளார், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்என்றும் கூறினார்.

ரஜினிகாந்தை தொடர்ந்து அவரது சகலையும் நடிகருமான ஒய் ஜி மகேந்திரன் பேசினார். அப்போது, சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனைக்கு தடாலடியாக பதிலளித்தார் ஒய்ஜி மகேந்திரன். அதாவது, ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்றார்.