பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள்: நயன்தாரா

பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி என நடிகை நயன்தாரா அறிவுறுத்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகும் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஊதா கலர் சேலை, தலையில் கொண்டை மல்லிப்பூ என ஹோம்ளி லுக்கில் பங்கேற்ற நயன்தாரா மாணவர்களுக்கு ஏராளமான அறிவுரைகளை கூறினார். அவர் பேசியதாவது:-

எப்போதும் லைப்ல ஹேப்பியா இருங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க. எப்படி இருந்தாலும் எல்லாரும் லைப்ல சக்ஸஸ்புல்லா இருப்பீங்க. அந்த சக்ஸஸ் நாளைக்கு வரும் போது அன்று வருத்தப்பட்ட நேரங்கள் குறித்து கவலை கொள்வீர்கள். கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம், கல்லூரி வாழ்க்கை மகிழ்வானது, இந்த நேரத்தில் நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். கல்லூரி முடிந்து வெற்றி அடைந்த நபராக மாறினாலும் பணிவாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர்களுக்காக தினமும் 10 நிமிடங்களையாவது செலவழியுங்கள். அதில்தான் அவர்களது மகிழ்ச்சி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.