இலங்கை பெண்ணுடன் திருமணம்? சிம்பு தரப்பு மறுப்பு!

நடிகர் சிம்பு இலங்கை பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். தற்போது இவர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாற்பது வயதை நெருங்கியும் சிம்புவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்பு இவர் பல முன்னணி நடிகைகளுடன் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.

சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் சிம்புவிற்கு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.

இந்நிலையில், இந்த செய்திக்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக பரவிய செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம் என்றும், அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் ஊடகத்திடம் சொல்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.