‘பேச்சுலர்’ படத்தில் நடிக்க மறுத்ததிற்கான காரணம் குறித்து வாணி போஜன் விளக்கம்!

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நடிக்க மறுத்ததிற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நடிகை வாணி போஜன்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து அங்கும் வெற்றிக்கொடியை நாட்டி வரும் சிலரில் வாணி போஜனும் ஒருவர். இளம் நடிகையான இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. சோஷியல் மீடியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் ‘செங்களம்’ என்ற வெப் தொடர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் வாணி போஜன் கைவசம் தற்போது ஊர்க்குருவி, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் என ஏகப்பட்ட படங்கள் உள்ளன. ‘செங்களம்’ வெப் சீரிஸ் தொடர்பாக புரமோஷன்களில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார். அவ்வாறு ஒரு பேட்டியில் இதுவரை தான் தவறவிட்ட படங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பேச்சுலர்’ பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து பேசியுள்ளார். ‘பேச்சுலர்’ படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் முதலில் வந்தது. ஆனால் இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் செட் ஆவேனா என்ற சந்தேகம் இருந்தது. இந்தப்படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். நான் ‘பேச்சுலர்’ படத்தில் நடித்தால் எனக்காக ஹீரோயின் கேரக்டரில் பல காட்சிகளை இயக்குனர் மாற்றியிருப்பார். அவ்வாறு மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதற்காகவே அந்தப்படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன் என தெரிவித்துள்ளார் நடிகை வாணி போஜன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக திவ்ய பாரதி ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தார். இந்தக்கால லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய இந்தப்படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை நடிகை திவ்ய பாரதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.