பாரத் பெயர் மாற்றம்: ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி: பிரகாஷ் ராஜ் டுவீட்!

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு 20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்தவர்களும் விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் பாரத் என பெயர் மாற்றம் செய்வது சரிதான் என தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே வரும் 18 ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இதற்கும் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் இந்தியாவின் கருத்துக்கணிப்பு: ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜின் இந்த பதிவு பெரும் வைரலாகி வருகிறது. பாஜகவினர் பலரும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.