உங்க அம்மா தங்கச்சியா இருந்தா விடுவீங்களா: பிரியங்கா மோகன்!

வீட்ல அம்மா, தங்கச்சிக்கு ஒண்ணு நடந்தா நீங்க சும்மா விடுவீங்களா? ஆனால், நீங்க மட்டும் இன்னொரு பெண்ணுக்கு தப்பான ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என பிரியங்கா மோகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். கடந்த 2022ம் ஆண்டு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படமும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் வெளியாகிறது. கையில் துப்பாக்கியை எல்லாம் ஏந்திக் கொண்டு பிரியங்கா மோகன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக தனுஷ் தலைமையில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட பிரியங்கா மோகனின் அழகில் தனுஷ் ரசிகர்கள் எல்லாம் சொக்கிப் போய் விட்டனர். தொடர்ந்து அந்த படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை கிளப்பியது. அந்த கூட்டத்திலேயே அவரை பிடித்து செருப்பால அடிப்பேன் நாயே, அப்புறம் ஏன்டா ஓடுற, காலில் விழுடா என விளாசி எடுத்திருந்தார்.

இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரியங்கா மோகன் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரியங்கா மோகன் அந்த பேட்டியில் கேப்டன் மில்லர் படம் பற்றியும் பீரியட் படத்தில் தான் ஆயுதம் ஏந்தி நடித்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். நிஜ துப்பாக்கியை பயன்படுத்தினேன் என்றும் புல்லட் மற்றும் டம்மி தான் என்றும் கூறினார். துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும், ட்ரிக்கரில் எப்படி கை வைக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி கொடுத்தனர் என்றார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா மோகன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். அனைவரையும் மனித உயிர்களாக முதலில் மதிக்க வேண்டும். உங்க வீட்ல அம்மா, தங்கச்சிக்கு ஒண்ணு நடந்தா நீங்க சும்மா விடுவீங்களா? ஆனால், நீங்க மட்டும் இன்னொரு பெண்ணுக்கு தப்பான ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என கேள்வி எழுப்பி உள்ளார்.