கவனத்தை ஈர்க்கவும் விளம்பரத்துக்காகவும் பதிவிடுகிறேனா?: ராஷ்மி கவுதம்!

“கவனத்தை ஈர்க்கவும் விளம்பரத்துக்காகவும் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று நடிகை ராஷ்மி கவுதம் கூறியுள்ளார்.

தமிழில் சாந்தனு ஜோடியாக ‘கண்டேன்’ படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் அவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் உணவு விநியோக நிறுவனம் ஒன்று சைவ உணவை விநியோகிப்பவர்களுக்கு பச்சை நிற ஆடையை அறிமுகப்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. நடிகை ராஷ்மி கவுதம், உணவு விநியோக நிறுவனத்தின் முடிவை ஆதரித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த சில நெட்டிசன்கள், விளம்பரத்துக்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவதாகச் சாடினர்.

இதற்குப் பதிலளித்த ராஷ்மி கவுதம், “கவனத்தை ஈர்க்கவும் விளம்பரத்துக்காகவும் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் ஒரு புகைப்படம் பதிவிட்டால், அதை பெரிதாக்கிப் பார்த்து கொண்டே இருப்பார்கள். இப்போதும் நீங்கள் விரும்பிய கவனத்தைப் பெற்றுள்ளீர்கள். இதற்காக எவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்?” என்று கேட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.