சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க போராட வேண்டியுள்ளது: சமுத்திரகனி!

‘ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது’ என சமுத்திரகனி பேசியுள்ளார்.

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை தன்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய சமுத்திரகனி கூறியதாவது:-

அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. படத்தின் இயக்குநர் என்ன எடுக்கப்போகிறார் என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக அப்பாவியாக எதுவும் தெரியாது என சொல்பவர்கள் படத்தை எடுத்துவிடுவார்கள். நீச்சல் தெரியாதவனை தண்ணீரில் தூக்கிப்போட்டால் நீச்சல் கற்றுக்கொண்டு மீண்டு வந்துவிடுவான். ஆனால், அதிகமாக பேசி ஆராய்ச்சி செய்பவர்கள் அவனும் மூழ்கி நம்மையும் மூழ்கடித்து விடுவான். நம்பிக்கையை மட்டும் சுமந்து வருபவர்களின் பின்னணியில் சென்றுவிடுவேன். படம் சிறப்பாக வந்துள்ளது.

புரிந்துகொள்ளவே முடியாத பந்தம் அப்பா – மகன் உறவு தான். ‘ராமம் ராகவம்’ படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது. ‘அப்பா’ என ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் உள்ளது. அதன்பிறகு எனக்கு படம் எடுக்கவே தோணவில்லை. பேரன்புடன் படத்தை எடுத்துவிடுகிறோம். அதை கொண்டு போய் சேர்க்கும்போது மகிழ்ச்சியே இருபதில்லை. அதற்கான வழியும் தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.