நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி கோரி மோசடி நடப்பதாக போலீஸில் புகார்!

நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகள் மூலம் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பொதுமக்களிடம் நிதி பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் நாசர் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரப்படுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடமும், காவல் ஆய்வாளர், சைபர்க்ரைம், பரங்கிமலை அவர்களிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு அந்த விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த விசாரணை நடைப்பெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.