அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்!

வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஞானவேல் அந்த படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்றார். இறுதிசுற்றில் அந்த படம் ஆஸ்கருக்கு தேர்வாகவில்லை என்றாலும் ஆஸ்கர் யூடியூப் சேனலில் ஜெய்பீம் படம் பற்றிய வீடியோ வெளியிடப்பட்டது. ஜெய்பீம் படத்துக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் ஞானவேல். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் என பலர் நடித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா என பல இடங்களில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மும்பையில் சில நாட்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கோட் சூட் அணிந்துக் கொண்டு கெத்தாக போஸ் கொடுத்து ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை தற்போது லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வேட்டையன் பட அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியாக காத்திருக்கிறது.