அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம்: அதிபர் கிம் ஜாங்

வட கொரியாவை மிரட்டினால் அணு ஆயுதங்களால் பதிலடி கொடுப்போம், என வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரியாவின் 90வது ஆண்டு ராணுவ தின விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களின் ராணுவ அணிவகுப்பு நடந்தது. இவ்விழாவில் ‘ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன் வலியுறுத்தினார்.

இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், ராணுவ அதிகாரிகளை அழைத்து அணிவகுப்பை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து நம் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாட்டு நலனுக்கு எதிராக மிரட்டல் விடுப்பது அல்லது ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அதை தடுக்க நாம் முன்கூட்டியே அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வட கொரியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிட்டால் தான் தடையை நீக்க முடியும் என அமெரிக்கா தெரிவித்து விட்டது. இதனால் அமெரிக்காவை ஆதரிக்கும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளை மிரட்ட வட கொரியா தொடர்ந்து நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.