இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது!

வேளாண்- சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா – ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையேயான கூட்டறிக்கை கையெழுத்தானது

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக ஜெர்மனி சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்க ஜெர்மனி பிரதமர் மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் வரவேற்றார். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இந்திய-ஜெர்மனி உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், உக்ரைன் – ரஷ்யா போர் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுபோக்குகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்த முக்கிய விஷயங்கள் விவாதத்தில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்- சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில், இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்வெஞ்சா சுல்சேவும் காணொலி வாயிலாக பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.

இந்த கூட்டு ஆராய்ச்சி, இரு நாடுகளையும் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளிடையே, அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் புதுமை முயற்சிகள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்ப மாற்றம், அறிவியல் ஆற்றல் ஆகியவை, பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் மற்றும் தனியார் துறை உடனான கூட்டு ஆராய்ச்சி போன்றவை ஊக்குவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 2025-க்குள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பாக, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 300 மில்லியன் யூரோக்களை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலைநகர் பெர்லினில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலையில் பிரதமர் மோடி போய் சேர்ந்தார். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் சார்பில் பழமை வாய்ந்த பிராண்டன்பர்க் கேட் பகுதியில் உள்ள ஓட்டலில் பிரமதர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடாகி இருந்தது. இதற்காக அந்த அதிகாலை நேரத்தையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் அங்கே குவிந்தனர். வண்ண உடைகள், பாரம்பரிய ஆடைகள் என நாட்டின் பன்முக கலாசாரத்தை வெளிப்படுத்தும் உடைகளில் வந்திருந்த அவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது.

பின்னர் பிரதமர் மோடி வந்தவுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். கார்பா மற்றும் பிற இந்திய பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாத கீ ஜே’ உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பி மகிழ்ந்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அசுதோஷ் என்ற இந்திய வம்சாவளி சிறுவன், பிரதமர் மோடிக்காக தேசபக்தி பாடல் ஒன்றை பாடினான். அதற்கு, ‘சபாஷ்’ எனக்கூறி பிரதமர் மோடி பாராட்டினார். இதைப்போல மான்யா மிஸ்ரா என்ற சிறுமி பிரதமர் மோடியின் ஓவியத்தை பென்சிலால் வரைந்து அவருக்கு பரிசளித்தார். அதை வாங்கிக்கொண்ட பிரதமர் மோடி, அதில் கையெழுத்து போட்டு மீண்டும் சிறுமியிடமே வழங்கினார். மேலும் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இவ்வாறு பிரதமர் மோடியுடன் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவரை நெருக்கமாக சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.