அதிமுகவைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது: சசிகலா

அதிமுகவைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என்று சசிகலா கூறியுள்ளார்.

முதலில் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சசிகலா திடீரென ஒதுங்குவதாக கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அறிவித்தார். திடீரென ஆன்மிக பயணம் கிளம்பி கோவில் கோவிலாக வலம் வந்தார். இந்த ஆண்டு ஆன்மீக பயணம் சென்றாலும் பல ஊர்களில் அரசியல் பேசி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா பேசியதாவது:

இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த கழக தொண்டர்களுக்கும் கழகம் ஒன்றுபட வேண்டும் வென்று காட்டிட வேண்டும் என ஏங்கித் தவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம். எதிர்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இயக்கம் எத்தனையோ சோதனைகளை கடந்த வந்துள்ளது. புரட்சித் தலைவர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதே சோதனை காலம் தான் தற்போது புரட்சித்தலைவி அம்மா மறைவிற்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு எவ்வாறு கழகம் மீண்டும் எழுந்து வந்தது அதேபோன்று தற்போதும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

கழக தொண்டர்கள் கை காட்டும் வரை நிர்வாகிகள் நிலைக்கலாம். ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணமாக இருப்பேன் அது வரை ஓய மாட்டேன். அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. கழகத்தைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகர் இல்லா பேரியக்கமாக உருவாக்குகின்ற உயர்ந்த பணியில் ஈடுபட்டு வரும் வேளையில் பொறுமையை கடைபிடியுங்கள். கண்டிப்பாக புகழ் உங்களை வந்தடையும். இவ்வாறு சசிகலா கூறினார்.