லாட்டரி அதிபர்களுடன் தி.மு.க நிர்வாகிகள் கூட்டு: எடப்பாடி பழனிசாமி!

லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி விற்பதே தி.மு.க நிர்வாகிகள்தான். இவர்கள் மீது எப்படி காவல்துறை தைரியமாக நடவடிக்கை எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த நூல் வியாபாரியான ராதாகிருஷ்ணன் 62 லட்சம் ரூபாயை லாட்டரியில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் காரணம் என்று தெரிவத்தவர் அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை நஷ்ட ஈடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என தற்கொலைக்கு முன்பாக பேசிய வீடியோவில் கூறியுள்ளார். மேலும் லாட்டரி சீட்டால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள் எனவும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ள செந்தில் என்பவர், தி.மு.கவைச் சேர்ந்தவர். இவரது மனைவி கீதாஞ்சலி, ஈரோடு மாநகராட்சி 39வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் துணையுடன் ஆளுங்கட்சியினர் இந்த தொழிலை நடத்தி வரும் இந்த தற்கொலைச் சம்பவம் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அப்பகுதியில் கள்ள லாட்டரி விற்ற, தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரிடம், லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். 62 லட்சம் ரூபாயை இழந்துள்ளதால், தற்கொலை செய்து கொண்டார்.

கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க, காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. ஜெயலலிதா ஆட்சியில், லாட்டரி அறவே ஒழிக்கப்பட்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை, காவல் துறை இரும்புக்கரம் கொண்டு தடுத்தது. அதே காவல்துறை தான் இப்போதும் உள்ளது. ஆனால், லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி விற்பது தி.மு.க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள். இவர்கள் மீது எப்படி காவல்துறை தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியும்?

அடுத்து வேலுார் மாவட்டம், ராமநாயினிகுப்பம் ஊராட்சி செயலர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் அரி, ஊராட்சிக்கு வரும் நிதி முழுதும் தனக்கு வழங்க வேண்டும் என வற்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டதாக, கடிதம் எழுதி வைத்துள்ளதாக செய்தி.

காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு, கொள்ளைக் கும்பல், இந்த அரசில் பலம் பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போது, இந்த அரசின் விளம்பர ஆட்சி, இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற கேள்வி, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.