வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் முருகன் தனக்கு 6 நாள் பரோல் விடுப்பு வழங்க கோரி இன்றோடு 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரது மனைவி நளினி வலியுறுத்தியும் முருகன் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது வக்கீல் புகழேந்தி சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கு மனு அனுப்பி உள்ளார். சிறைக் கைதிகள் உரிமை மையம் தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் 3 பாட்டில் குளுக்கோஸ் முருகனுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முருகன் ஜெயில் உணவை சாப்பிடவில்லை. பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தொடர்ந்து முருகனை கண்காணித்து வருகிறோம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.