கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவு!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பது உலகநாடுகளால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்,கடந்த 12-ந்தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

நேற்று மேலும் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலி எண்ணிக்கை 50 ஆகஉயர்ந்தது. ஒரேநாளில், 3 லட்சத்து 92 ஆயிரத்து 920பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது,அவர் அதிகாரிகளை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:-

அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவுபிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இந்நிலையில் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:-

வடகொரியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. வடகொரியா இன்னும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தொடங்காமல் உள்ளது. இதனால், தொற்று மக்களிடையே வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. வடகொரியாவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டு வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், அரசுக்கும், மக்களுக்கும் உலக சுகாதார அமைப்பு எப்பொழுதும் ஆதரவளிக்கவும், அக்கறை காட்டவும் தயாராக உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம், எங்கள் உறுப்பு நாட்டிற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு பிராந்திய இயக்குனர் கூறினார்.