சென்னையில் முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

சென்னைவாசிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று கூறினார்.

கரூரில், திமுக சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடந்தது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எம்பி அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:-

இந்தியாவில் திராவிட சித்தாந்தம் இப்போது தேவையாக இருக்கிறது. ஆனால், இது எந்த வகையில் தேவை என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கவே, இந்த பயிலரங்கு நடைபெற்றது. திராவிடம் எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் பயணிக்கிறது என்பது குறித்து இந்த பயிலரங்கில் எடுத்து சொல்லப்பட்டது. திராவிடத்தின் மைய நாடியாக உள்ள சமூக நீதி கொள்கை மூலம், சீரான வளர்ச்சி பாதையில் செல்வதோடு, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் இன்று உருவாகிஉள்ளது. எனவே, பொருளாதார நிலையில் திராவிட கொள்கையால் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறித்தும் இந்த பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனால், வாக்குறுதியில் சொன்ன, சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், 72 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதபட்சத்தில், தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜக அண்ணாமலை சவால் விட்டுள்ளார். சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக தரவில்லை. பிரதமர் மோடியே, தான் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னாரே? பொதுமக்கள் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னாரே? இப்போது, பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில்தான் அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் தேவையற்ற வாதம்..

பஸ் கட்டணம் உயராது என்று தமிழக முதல்வர் ஏற்கனவே உறுதி தந்துள்ளார். அதேபோல், சென்னையில் முதல் கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.. அதன் சேவை, மக்களுடைய பயன்பாட்டைப் பொறுத்து, அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.