மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மீனவ பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள், இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள் தான் சந்திராவை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களை சரமாரியாக தாக்கி, அவர்களின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் தான் 6 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா என்று தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.