ஜப்பான் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நேற்று நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இரண்டு நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தார்.

இந்த மாநாட்டிற்கு இடையில் மோடியும், பைடனும் அமர்ந்து பேசினர். இந்த பேச்சில் இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும் என்று இரு தலைவர்கள் உறுதி அளித்தனர். இந்திய, அமெரிக்க உறவு வலுப்பெற தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா வெளிப்படையாகவும் , திறந்த மனதுடனும் இருப்பதாக மோடி தெரிவித்தார்.

கோவிட் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் பணிகள் சிறப்பானதாக இருந்ததாக அதிபர் பைடன் பாராட்டினார். இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டதாக பைடன் தெரிவித்தார்.