இந்தியா – வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

வியட்னாம் நாட்டில் இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது. இதுதவிர, உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் வேறு சில நாடுகளுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வியட்னாம் நாட்டுக்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், அந்நாட்டின் ஹாங் ஹா நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை வியட்னாமிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, மத்திய அரசு அனுமதியோடு, 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 12 அதிவிரைவு காவல் படகுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்ட பணிகள் வெற்றிகரம் ஆக நிறைவடைந்துள்ளன என்பதனை இந்த விழா குறிக்கிறது. நம்முடைய மேக் இன் இந்தியா-மேக் பார் தி வேர்ல்டு திட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த திட்டம் அமைந்துள்ளது. வியட்னாம் போன்ற நம்முடைய நெருங்கிய நண்பர்கள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பின் வழியே, நம்முடைய பாதுகாப்பு தொழில்களுக்கான உருவாக்கத்தின் ஒரு பகுதியாக வருமென்றால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா – வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030ம் ஆண்டு வரை விரிவுபடுத்தவும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக இருநாடுகளும் தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வியட்நாம் நாட்டு ராணுவ அமைச்சர் ஜெனரல் பான் வான் ஜியாங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இந்தோ – பசிபிக் பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவு முக்கிய காரணியாக உள்ளது. பேச்சுக்கு பின், 2030ம் ஆண்டுக்கான இந்தியா- வியட்நாம் ராணுவ உறவின் கூட்டறிக்கையில் இருநாடுகளும் கையொப்பமிட்டன. மேலும், இரு நாட்டு ராணுவமும், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்கு தங்கள் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலும் நேரத்தில், வியட்நாமுடனான இந்த இரு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.