உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் உதவி: ஜோ பைடன்

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற நேட்டோ உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை அளிக்கும் என்றும், ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறாது என்றும் கூறினார்.

30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வரும் சூழலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும், அளித்து வரும் உதவிகள் அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் அச்சுறுத்தலையடுத்து ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்க போகிறோம். போலந்தில் நிரந்தர ராணுவ தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப் படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்கா நேட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.