காபூல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி வந்த தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு எதிரான அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் தற்போது டி20 லீக் என்னும் உள்ளூர் அணிகளுக்கான ஷ்பகீசா டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் பெண்ட் – இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது தான் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதும் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வெடிகுண்டு தாக்குதலில் ரசிகர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போட்டியை நடத்தும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஐஎஸ் அமைப்பினர் பல்வேறு தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், நேற்றைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதலை அடுத்து காபூல் நகரம் முழுவதும் தாலிபான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.