அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை: சிங்கப்பூா் பிரதமா்!

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் தெரிவித்தாா்.

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உயா்நிலை ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை, பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவாா்த்தை உள்ளிட்ட பல விஷயங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக சீனா அறிவித்தது.

இந்நிலையில், சிங்கப்பூரின் 57-ஆவது தேசிய தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் லீ சீன் லூங் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறைவதற்கும் இப்போதைக்கு வாய்ப்புகள் இல்லை. நம்மைச் சுற்றி ஒரு புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் கடுமையான போட்டி, பதற்றங்களால் சிங்கப்பூா் சூழப்படும். இந்தச் சூழ்நிலையில் ஒற்றுமையாக இருப்பதே நாம் தப்பிப்பதற்கான வழி. நமது பிராந்தியம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அமைதியாகவோ, நிலைத்தன்மையுடனோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கேற்ப நாம் நம்மை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.