பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36), உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலமாக பின்லாந்துக்கான சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து பலரது பாராட்டுகளை பெற்ற சன்னா மரின், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் சன்னா மரீன் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, தனது நண்பர்களுடன் சன்னா மரின் உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சன்னா மரின் நடந்து கொண்டதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இதுபோன்று நடந்து கொள்ளலாமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேசமயம், சன்னா மரினுக்கு ஆதராவகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் என்றால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாது என்று சன்னா மரினுக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.

இதனிடையே, நண்பர்களுடனான பார்ட்டியில் சன்னா மரின் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதாக சிலர் குற்றம் சாட்டினர். அவருக்கு போதை மருந்து சோதனை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வந்தனர். ஆனால், தான் போதை மருந்து பயன்படுத்தவில்லை என சன்னா மரின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, “என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தந்துள்ளது. நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது அருந்தினேன். ஆனால், நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுதான் அனைத்தையும் செய்தேன்” என்று சன்னா மரின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சன்னா மரின் கூறுகையில், “சமீப நாட்களாக நான் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இருந்தேன் அல்லது நானே போதைப்பொருள் பயன்படுத்தினேன் என்று மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று நான் கருதுகிறேன், போதைப்பொருள் சோதனைக்கான கோரிக்கை நியாயமற்றது என்று நான் கருதுகிறேன். ஆனாலும், எனது சொந்த சட்டப் பாதுகாப்பிற்காகவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், நான் இன்று போதை மருந்து பரிசோதனை செய்துள்ளேன், அதன் முடிவுகள் வர சுமார் ஒரு வாரகாலம் ஆகலாம்” என்றார்.