சோமாலியாவின் மொகாதீசு நகரில் உள்ள ஓட்டலில் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி!

மொகாதீசு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள நாடு சோமாலியா. இதன் தலைநகர் மொகாதீசுவில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று மாலை மொகாதீசுவில் உள்ள மிகவும் பிரபலமான ஹயாத் ஓட்டலில் அல்-ஷபாப் பயங்கரவாத குழுவை சேர்ந்த சிலர் அதிரடியாக நுழைந்து தாக்கியுள்ளனர். இவர்கள் அல்-கொய்தா உடன் தொடர்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனியார் ஓட்டலை குறிவைத்து இரண்டு முறை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். பின்னர் ஓட்டலின் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டர். உயிரிழந்த நபர்கள் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் பயங்கரவாதிகளுடன் தொடர் சண்டை நடந்தது. ஓட்டலுக்குள் நுழைந்த சிறப்பு போலீசார் படை பொதுமக்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை பத்திரமாக மீட்டனர். அரசு அதிகாரிகள் நடத்தும் முக்கிய சந்திப்புகள் ஹயாத் ஓட்டலில் தான் பெரும்பாலும் நடக்கும். எனவே இங்கு தாக்குதல் நடத்தினால் அரசை ஆட்டம் காணச் செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சோமாலியா என்றால் பொதுவாக கடற்கொள்ளையர்கள் தான் நினைவிற்கு வருவர். இந்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வரும் கப்பல்களை மடக்கி பெரிய அளவில் கொள்ளையடித்து விட்டு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த சூழலில் நாட்டிற்குள்ளும் சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை. சோமாலியா நாட்டில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு முகாமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சோமாலியா அரசை வீழ்த்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அரசு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.