அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை ரத்து செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணி இடங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். காலியிடங்களை நிரப்பாமல் வைத்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அப்பட்டமான ஆட் குறைப்பு நடவடிக்கை தான். இதன் முடிவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை; அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலி இடங்களைவிட, புதிதாக உருவாக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இத்தகைய சூழலில் காலியாக உள்ள 3½ லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.