ஆணவத்தின் உச்சத்தில் அண்ணாமலை: திருமாவளவன்!

பிடிஆர் மீதான அண்ணாமலையின் விமர்சனம் குறித்து திருமாவளவன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது மிக மோசமான வார்த்தைகளால் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். உச்சகட்டமாக, “ஒரு புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்ததைத் தவிர நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உருப்படியாக செய்தது உண்டா? அரசியலுக்கும், நமது மாநிலத்துக்கும் நீங்கள் ஒரு சாபக்கேடு. நீங்கள் என் செருப்புக்கு கூட சமமாக மாட்டீர்கள்” என்று பேசினார். இது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் டுவிட்டரில் அண்ணாமலை கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். “சமமில்லை என்பது தான் சனாதனம். அவன் சமமில்லை; அவள் சமமில்லை; அது சமமில்லை என்பதெல்லாம் காலம் காலமாகக் குருதியில் ஊறிக் கிடக்கும் சனாதனப் புத்தியின் எச்சம்! தானென்ற ஆணவத்தின் உச்சம்! முதிர்ச்சியின்மையின் முற்றம். சகிப்பின்மையின் குற்றம். அச்சத்தின் பாய்ச்சல்! அறியாமையின் கூச்சல்!” என்று திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.