ரூ.12,000க்கும் குறைவான சீன போன்களுக்கு தடையில்லை: மத்திய அரசு!

ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் தடை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்து உள்ளது.

இந்திய செல்போன் சந்தைகளில் சீனா நிறுவனங்களான ரியல்மி, ஓப்போ, விவோ போன்ற செல்போன்கள் அதிகளவில் விற்பனையாகிறது. இந்நிலையில், சீன செல்போன் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் விதித்தது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரூ.12,000க்கும் குறைவான ஸ்மார்ட் போன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ‘ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களை தடை செய்யும் திட்டம் மத்திய அரசுக்கும் ஏதுவும் இல்லை. வெளிநாட்டு பிராண்டுகளை இந்தியா சந்தையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இந்திய பிராண்டுகளுக்கு சந்தையில் உரிய இடம் கிடைத்து அவற்றை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் விலை விதிப்பில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதை அரசு தலையிட்டு முறைப்படும். வரும் 2025-2026ம் ஆண்டில் மின்னணு உற்பத்தியில் ரூ.237 லட்சம் கோடி எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.