கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளை: தங்கம் பறிமுதல், 3 பேர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே, நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், புனேவைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 17 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரிபுதூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீ குமரன் சொர்ண மகால் நகைக்கடையின் பூட்டை உடைத்து, 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள், கடந்த ஆகஸ்டு 8-ம் தேதி கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையடித்த நகைகளை அருகில் உள்ள சோளக்காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று கொள்ளையர்கள் பங்கு பிரித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. அப்போது சோளக்காட்டுப் பகுதியில் நகைப் பெட்டிகள் பைகளை, கொள்ளைக் கும்பல் வீசிவிட்டு சென்றதில், சிறு மூக்குத்திகள் மற்றும் சிறு வளையங்கள் அங்கே கிடந்ததை போலீஸார் மீட்டெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி புகழேந்தி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். புலன் விசாரணையில், நகைக்கடை அருகிலிருந்த வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்களின் தடயத்தைக் கொண்டு போலீஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்தனர். அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு கும்பல், குடும்பத்தினருடன் புதுச்சேரியில் தங்கி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. புனேவைச் சேர்ந்த லாலாஃபூலா ரத்தோட், ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகியோர் நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

கொள்ளைக் கும்பலை பல இடங்களில் தேடிவந்த நிலையில், நேற்று, புதுச்சேரியில் வைத்து லாலாஃபூலா ரத்தோட், அஜய்பகவான் நானாவத், மற்றும் சர்னால் மத்யா நானாவத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.510 கிலோ தங்க ஆபரணங்களையும், 17 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த நகைகளில் 20 கிராம் நகைகள் புதுச்சேரியில் உள்ள கடையில் விற்பனை செய்ததையும் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட்டை, தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவதாகவும் பகலவன் தெரிவித்தார். நகைக்கடை கொள்ளையை, குறுகிய காலத்தில் மீட்டெடுத்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் வெகுவாக பாராட்டினார்.