தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இலங்கை சிறையில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்களது படகுகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களை விடுவிக்க, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்க, சர்வதேச எல்லையில் இந்திய கடற்படை கப்பலை கண்காணிப்புக்கு நிறுத்தும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.