6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகம்: அமித் ஷா

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அடுத்த 6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் அனைத்து இந்திய சிறைச்சாலைகள் பணியின் 6-ஆவது மாநாடு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:-

கடந்த 2016-ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளை நிா்வகிக்கும் விதிகள் அடங்கிய கையேட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. சிறைச்சாலைகள் குறித்த கண்ணோட்டத்தை மறுமதிப்பீடு செய்து, சிறைகளில் சீா்திருத்தங்களை முன்னெடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தக் கையேட்டை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்தான் ஏற்றுக்கொண்டன. இதர மாநில அரசுகளும் அந்தக் கையேட்டை ஏற்க வேண்டும்.

அந்தக் கையேட்டை தொடா்ந்து ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய சிறைச்சாலைகள் சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதுதொடா்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் புதிய சிறைச்சாலைகள் சட்டம் அமல்படுத்தப்படும். நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை நவீனமயமாக்க அந்தச் சட்டம் கொண்டு வரப்படும்.

பல மாநிலங்களில் ஆங்கிலேயா்களால் கட்டப்பட்ட சிறைகள், இன்றளவும் அதே நிலையில் உள்ளன. பாதுகாப்பு கண்ணோட்டத்திலும், கைதிகள் நன்றாக இருக்கவும் சிறைகளை நவீனமயமாக்குவதுடன், அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டியது மிக முக்கியம். சிறை நிா்வாகத்தை மேம்படுத்தாமல் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாது.

ஒவ்வொரு மாவட்ட சிறையிலும் நீதிமன்ற விசாரணைக்கான காணொலி வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதம், போதைப்பொருள்களை பரப்பும் கைதிகளை சிறைகளில் தனியாக வைத்திருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்கு சிறை நிா்வாகம் மிக முக்கியமானதாக திகழ்கிறது. சிறைகள் தொடா்பான சமூகக் கண்ணோட்டம் மாற வேண்டும்.

குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிப்பது முக்கியமானதுதான். அதேவேளையில், கைதிகளின் மறு வாழ்வுக்கான வழிகளை கண்டறிய வேண்டியது சிறை நிா்வாகத்தின் பொறுப்பு. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் இயல்பாகவே குற்றவாளிகள் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.