அனைவரிடமும் தலைமை பண்பு உள்ளது: அண்ணாமலை

எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

மாணவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு அங்கமாகும். உடல் நலத்திற்கு மட்டுமின்றி மன நலத்திற்கும் விளையாட்டு அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் இயற்கையை ரசிக்க வேண்டும். மழையை கண்டு அஞ்சி ஓடி விடக்கூடாது. மழையில் நனைந்து பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவ- மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளித்தார். மாணவ -மாணவிகள், நீங்கள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதற்கு தூண்டுதலாக இருந்தது யார்? உங்களின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்? ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு ஏற்ற நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் பணியாற்றவில்லை? எத்தனை ஆண்டுகள் போலீஸ் துறையில் பணியாற்றினீர்கள்? என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:-

என்னை ஐ.பி.எஸ்.அதிகாரியாக கொண்டு வர தூண்டுதலாக இருந்தது, நான் வாழ்க்கையில் சந்தித்த நேர்மையான மனிதர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். கர்நாடகாவில் 9 ஆண்டுகள் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். அங்கு பணியாற்றிய போது மக்களுக்கு சீருடை அணிந்து பணியாற்றினேன். தற்பொழுது தமிழ்நாட்டில் சீருடை அணியாமல் மக்கள் பணி செய்து வருகிறேன். நான் பிறந்தது ஒரு குக்கிராமமாகும். அங்கு 30-க்கும் குறைவான வீடுகளே இருந்தது. ஆடு, மாடுகள் விவசாயம் என அந்த வாழ்க்கை சூழலில் வளர்ந்தவன் நான். இந்த விழா மேடையில் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பதே சாதனையாக கருதுகிறேன்.

எல்லோருக்கும் ஒரு கெட்ட குணம் இருக்கும். நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து நல்ல குணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி தன்மை இருப்பது போல் மனிதனுக்கும் தனித்தனி திறமைகள் உண்டு. அந்த திறமைகளை நாம் கண்டறிந்து வெளிக் கொண்டு வர வேண்டும். எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அனைவரையும் சமமாக கருத வேண்டும். அனைவரையும் மதிக்க தெரிந்திருக்க வேண்டும். இதுவே தலைமை பண்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.