எங்க கிட்ட அதிமுக.,வின் 50 எம்எல்ஏ, 2 எம்பி.,க்கள் இருக்காங்க: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ.,க்கள் 10 பேர் அதிமுக.,வில் சேர்வதற்காக பேசிக்கொண்டிருக்கின்றனர் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ள தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருக்கின்றனர். அதிமுக.,விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ.,க்களின் பட்டியலை பழனிசாமி வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன். உண்மையான திராவிட இயக்கம் திமுக தான். அதிமுகவில் இருந்து பலபேர் எங்களுடன் வந்துள்ளனர்; இதனை யாரும் மறுக்க முடியாது. எனவே, அதிமுக.,வினர் திமுக.,வில் இணைய வேண்டும்.

ராகுலின் யாத்திரை என்பது பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் வாங்கிதான் மோடி பிரதமரானார். அதாவது 63 சதவீத ஓட்டுகள் மோடிக்கு எதிர்ப்பாக வந்துள்ளது.
இத்தகைய 63 சதவீத ஓட்டுகளையும் ஒன்றாக திரட்டும் பணியில் தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல் ஈடுபட்டுள்ளனர். இந்த யாத்திரை என்பது 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை மத்தியில் உருவாக்கும். அடுத்த பார்லி தேர்தலில் திமுக.,வின் பங்கு நிச்சயமாக பெரியளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் தொடர்பில் இருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
அதன் ஒருபகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரது இல்ல காதணி விழாவில் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவால் தான் சி.பி.சி.ஐ..டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர். ராகுல்காந்தி காங்கிரசை வளர்க்க நடை பயணம் செல்கிறார். தி.மு.க. கார்ப்பரேட் கட்சி. அ.தி.மு.க. தொண்டர்களால் ஆன கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.