தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான்: அன்புமணி

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேஷ் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மணமக்கள் அருண் பிரசாத் மற்றும் திவ்யா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழுதப்படாத மோசடி நடைபெறுகிறது. ஒரு மூட்டைக்கு ஐம்பது ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூல் செய்கின்றார்கள். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு உள்ளது. அதனை அரசு பெற்று தர வேண்டும்.

இன்று காலை சென்னை மதுரவாயில் பகுதியில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களுடைய அழுத்தம் தாளாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்கின்றார்கள். மாணவர்கள் தற்கொலை முடிவுகளை தயவு செய்து எடுக்க வேண்டாம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதில்லை. இதற்கு ஆளுநர் என்ன பதில் சொல்லப் போகிறார். நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசுதான் தமிழ்நாடு மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்றும் நான் நினைக்கிறேன்.

டெல்டா பகுதிகளில் அதிகமான கொலை குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்டா கொலைகள் முதலமைச்சரின் கீழ் காவல்துறை இயங்குவதால் அவர் இதற்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். டெல்டா பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கலந்து ஆலோசித்து கொலை குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.