அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திர சூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். அப்போது அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக அலுவலகத்தை மூடி சீல் வைத்த வருவாய் கோட்டாச்சியர் நடவடிக்கையை ரத்து செய்தும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்க கூறியும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவித்தனர்.மேலும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 145ன் படி, ஒரு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதுமட்டுமின்றி, வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதிமுக பொதுக் குழு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் இந்த தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.