பணவீக்கம் பிரச்சினையே இல்லையா?: நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7% உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.71% ஆக இருந்தது. முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிலையில் பணவீக்கம் இல்லை எனவும், வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானப் பகிர்வில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் உயர்ந்துள்ளது.

பணவீக்கம் உயர்வை குறிப்பிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடம் இருந்து விலகி நிற்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில், “பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.