இந்தி அனைத்து மொழிகளின் நண்பன்: அமித் ஷா!

இந்தி மொழி போட்டி மொழி இல்லை என்றும், அனைத்து பிராந்திய மொழிகளின் நண்பன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தில் நடந்த அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:-

நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும். ஒவ்வொரு மொழியையும் நாம் பலப்படுத்துவதன் மூலம் அலுவல் மொழியான இந்தியையும் நாம் பலப்படுத்த முடியும். உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தில் முதன்மையானவை. இந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்து விட்டது. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நுணுக்கமாக ஆராய வேண்டும். துவக்கக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சித் துறையிலும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும்.

நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூற விரும்புகிறேன். சிலர் இந்தி மற்றும் குஜராத்தி, இந்தி மற்றும் தமிழ், இந்தி மற்றும் மராத்தி போட்டியாளர்கள் என்று தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டில் எந்த மொழிக்கும் இந்தி போட்டியாக இருக்க முடியாது. நாட்டின் அனைத்து மொழிகளின் நண்பன், இந்தி தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தி செழிக்கும் போது தான் நாட்டில் பிராந்திய மொழிகள் செழிக்கும். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். மொழிகளின் சக வாழ்வை ஏற்காத வரை, நம் சொந்த மொழியில் நாட்டை நடத்த வேண்டும் என்ற கனவை நம்மால் நனவாக்க முடியாது. அனைத்து மொழிகளையும், தாய்மொழிகளையும் வாழ வைப்போம். அனைத்து மொழிகளின் செழுமையால் மட்டுமே இந்தி செழிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்பு பெருமை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வு திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.